Friday, April 25, 2014

எதுசரி அதுசரி - பகுதி 3: அரிசிப்பொரி சோளப்பொரி



அம்மூவனார்: கபிலா என்ன எண்ணிய வண்ணம் உள்ளாய்?

கபிலர்: ஒன்றும் இல்லை அம்மூவனா! அண்மையில் நெஞ்சை நெருடிய ஒரு பேச்சு, எழுத்து வழக்கை பற்றி தான் எண்ணிக் கொண்டிருந்தேன். பெரிய திரையரங்கு, பூங்கா போன்ற  கேளிக்கை இடங்களில் கவனித்து கவலையுற்ற வழக்கு தான் அது.

அம்மூவனார்: எதை குறித்து கூறுகிறாய்?

கபிலர்:  மாமூலனார்  இயற்றிய பாலைத் திணை அகநானுறு பாடல் ஒன்று உங்களுக்கு நினைவில் உள்ளதா? 

அதாவது,

"... ... ...
அறு நீர்ப் பைஞ்சுனை ஆம் அறப் புலர்தலின்
உகு நெல் பொரியும் வெம்மைய யாவரும்
வழங்குநர் இன்மையின்... ... ... "

[அகநானுறு 1, அடி 13, மாமூலனார், பாலைத் திணை]

என்று வரும் அந்த பாடல்.

அம்மூவனார்: சிறிது விளக்கமாய் கூறு.

கபிலர்:  இந்த அகநானுறு பாடலில் பாலைத் திணையை தழுவி கடும் வறட்ச்சி நிலையை மாமூலனார் விவரிக்கிறார்.  பைஞ்சுனை வற்றும் அளவுக்கு கொளுத்தும் வெயில். அந்த வெப்பத்தில், நெல்(அரிசி) தூவினால், பொரியாக மாறும் என மிகச்சிறப்பாக அரிசிப்பொரி செய்யும் நுட்பத்தை அன்றே தன் பாடலில் விளக்கியுள்ளார்.  

அம்மூவனார்: ஆம், அதற்கு?

கபிலர்:  தென்னகதில் ஆயிரம் கணக்கான ஆண்டுகளாக தொண்று தொட்டு வழக்கில் உள்ள ஒரு சிற்றுண்டி அரிசிப்பொரி. இவ்வரிசிப்பொரியில், காரப்பொரி , கடலைப்பொரி, உப்புபொரி, இனிப்புபொரி என எத்தனையோ வகைகள் இருக்க ஒரு வகை அரிசிப்பொரியாவது ஒரு திரையரங்கிலே விற்க்கபடுகிறதா? ஏன் பெரிய திரையரங்கிலோ அல்லது அது போன்ற பெரிய கேளிக்கை இடங்களிலோ அரிசிப்பொரிக்கு இடம் இல்லையா? ஒரு வாலி என்ன, ஒரு கோணிபை நிறைய 1000 ரூபாய் கொடுத்து வாங்கி உண்ணுங்கள், படம் பாருங்கள். யார் வேண்டாம் என்றது?

அம்மூவனார்: சரிதான்!

கபிலர்:  இவ் வழக்கு ஒரு வகை கவலை தர, சோளப்பொரி சிக்கலுக்கு வருவோம். இதற்க்கு பரவலாக எல்லோருக்கும் பழகின வேற்று மொழிப் பெயர் "பாப்கான்". ஏன் "யானை பசிக்கு சோளப்பொரி " என்றொரு பழ மொழியும் உண்டல்லவா? அரிசிப்பொரி தான் நகர்ப்புற பெரிய திரையரங்குகளில் விற்க்கபடவில்லை என்றாலும், "சோளப்பொரி" என்று தமிழிலே பெயரிட்டாவது விற்க்ககூடாதா ? இவ்வழக்கு சரியா? இது அவலம் இல்லையா?

அம்மூவனார்: உண்மை தான். ஆனால், இந்த குறிப்பிட்ட தொழில் நுட்பம் இங்கு உருவானதா?

கபிலர்:  திரையிடும் அறிவியல் நுட்பம் கண்டறிந்தது எடிசன்
என்பதினால் அவர் படம் மட்டுமா உலகெங்கும் திரையிடப்படுகின்றது. அவர் மேல் உள்ள நன்றி உணர்வாலோ, அல்ல, வரலாற்று குறியீடு நிமித்தமாகவோ அவருக்கு சிலை தான் வடித்து நினைவுக் கூர்ந்தோமா? இல்லையே! திரைமேல் ஒளிப்பதும் தமிழ், திரைபின் ஒலிப்பதும் தமிழ், பின் தின்பதிற்கு "பொரி" போதாதா? திருத்திக்கொள்வோம் தீங்கில்லை இனி!

அம்மூவனார்: சரிதான்!

கபிலர்:  நீங்கள் எப்படியோ, நான் இனி மேல் தமிழக திரையரங்குகளில் அரிசிப்பொரி, அல்லது குறைந்த அளவு, "சோளப்பொரி" என்று எழுதியாவது விற்றால் தான் அந்த திரையரங்கம் செல்வதென சூள் கொண்டுள்ளேன். உவகையாக இச்சூளை நீங்கள் "அரிசிப்பொரி சோளப்பொரி கலகம்" என்றுகூட வைத்துக் கொள்ளுங்கள்!!   

   

Saturday, April 12, 2014

010. மயங்கு வியர் பொறித்த நுதலள் - ஓட்டம்


வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும்
இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்
உயங்கின்று அன்னை என் மெய் என்று அசைஇ
மயங்கு வியர் பொறித்த நுதலள் தண்ணென
முயங்கினள்
வதியும் மன்னே ...

[அகநானுறு 17, அடி 1-5, கயமனார், பாலைத் திணை]


இந்த அகநானுறு பாடல் வெகுச் சிறப்பாக  இளம் பெண்கள் விளையாடி களைப்புருவதை நம் முன் காண்பிக்கிறது. இப்பாடலில், தன்  செல்வம் செழித்த வீட்டில் வசிக்கும் போது, சக இளம் தோழிகளுடன் சிறிது நேரம் பந்து விளையாடி, கழங்கு விளையாடி, களைப்புற்று தன் மேனி தளர்வதை தாயிடம் முறையிட்டு, நெற்றியில் விளைந்த வியர்வையால் (தன் மேனி) குளிர தாயை தழுவினாள் என்று கயமனார்  பாடுகிறார். இவ்வைந்து அடிகளில் தான் எத்தனை தகவல்!

மாந்தர்களுக்கே உரிய தனிச் சிறப்பு பண்புகளில் ஒன்று வியர்வை. கயமனார்  நன்கு உணர்ந்து பாடியது போல், உடலில் தசைகளின் இயக்கத்தினால் உருவாகும் வெப்பத்தை தணியச் செய்ய வியர்வை உருவாகின்றது. நடப்பதை காட்டிலும் ஓட்டத்தில் 10 மடங்கு வெப்பம் பெருகும்.

பரிணாம வளர்ச்சியில் வெகு தொலைவு சென்று இரை தேடுவதிர்க்கும், தன்னை மற்ற கொடிய விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் இச் சிறப்பு பண்பு பேர் பங்களித்துள்ளது (மேற்கோள் க). இப் பண்பினை பெற்ற மாந்தன் ஒரு நாளில் 10 கி. மீ. தூரத்தை கடக்க இயலும். அடர்த்தியான முடியும் பிடரியும் உடல் மேல் கொண்ட விலங்கினங்கள் பெரும்பாலும் மூச்சிறைத்தே வெப்பத்தை தணித்துக்கொள்ளும். இதனால், பாயிச்சலில் வேகமாக ஓடினாலும் வெயிலில் வெகு தொலைவு ஓட இயலாது. உதாரணமாக, வெயிலில் சிறுத்தையால் பாயிச்சலில் 1 கி.மீ. மேல் ஓட இயலாது.  

நாய், நரி போன்ற விலங்குகள் ஒரு நாளில் 10-20 கி.மீ. வரை மித ஓட்டத்தில் ஓடகூடியவை. ஏன், ஒரு பனிநில நாய் வகை 50 கி.மீ. வரை பனி காலங்களில் கடுங்குளிரில் ஓடகூடியவை. இருப்பினும், வெயிலில் இவ் வோட்ட திறனை  பெரிதளவு இவை இழக்கும். காரணம், வெப்பத்தை தணித்துக் கொள்ளும் ஆற்றல் சிறப்பாக இவ் விலங்கினகளில் இல்லை என்பது தான். பொதுவாக உடலில் ஏற்ப்படும் வெப்பத்தை வியர்வையால், மூச்சிறைபால், நாவால் மேனி மேல் துவட்டியும் விலங்கினங்கள் தணித்துக் கொள்ளும். ஆனால், ஓட்டத்தில் பெரும்பாலும் மூச்சிறைபாலே இவ் விலங்குகள் வெப்பத்தை தணிக்க முடியும்.

ஆக, உச்சி வெயிலில், மூச்சிறைப்பை குறைத்து வியர்வை கொண்டு மாந்தர் தம்மால் மட்டுமே வெகு தொலைவு ஓட இயலும். ஓடினாள், ஓடினாள், மயங்கு வியர் பொறித்த நுதலள் ஓடினாள்!

 

மேற்கோள்

. The First Humans - Origin and Early Evolution of the Genus Homo, Chapter 8, 2009, Springer.