Friday, March 21, 2014

எதுசரி அதுசரி - பகுதி 2: கன்றா? குட்டியா?


இன்றைய பேச்சில் முற்றிலும் வழிப் பெயர்ந்த ஒரு வழக்கத்தை இப்பகுதியில் பார்ப்போம். தமிழில் முந்நூறாயிரம் சொற்கள் மேலே இருக்க, நமது அறியாமையாலும், திடமான ஒழுக்கம் வரையரைபடாமலும் உரிய சொற்கள் இன்று புழக்கத்தில் இல்லை. இருப்பினும், நாம் சிறிய முயற்சி எடுத்தாலே இந் நழுவலை தவிர்த்து, இழந்ததை மீட்டெடுக்கலாம்.
    
விலங்கின இளமைப் பெயர்கள் சிலவற்றை காண்போம். பொதுவாக இன்று, நாம் எல்லா இளம் விலங்கினை "குட்டி" என கூறும் வழக்கம் சரியா ? பின் எதுசரி?

புல்லுண்டு தாவியோடும் விலங்கினங்களான, ஆடு, குதிரை, மான் போன்றவையின் இளம் பருவத்தினை "மறி" என அழைக்க வேண்டும். ஆக, ஆட்டுக் குட்டி அன்று ஆட்டு மறியே சரி!
 
இதுபோல், கழுதைக் குட்டி, யானைக் குட்டி என்பது சரியல்ல, கழுதைக் கன்று, யானைக் கன்று எனக் கூறுவதே சரி! 

இப்படி, கன்றா குட்டியா என்ற சிந்தனை ஒரு புறம் இறுக்க, நாம் "கன்றுக் குட்டியின்னு" ஒன்று வைத்துள்ளோமே? அடடா"!" அது சரியன்று.
 
மேலும், மனிதர்களுக்கு குழவி (Infant) என அழைப்பது சரி! இதன்படி, பிறந்த குழந்தையை பேணும் மருத்துவப் பிரிவினை குழவி இயல் (Neonatology) எனக் கூறலாமா?

  

Tuesday, March 11, 2014

009. நின் கடுஞ்சூல் மகளே - சூலியல்


புன் கண் யானையொடு புலி வழங்கு அத்தம்
நயந்த காதலற் புணர்ந்து சென்றனளே
நெடும் சுவர் நல் இல் மருண்ட
இடும்பை உறவி நின் கடுஞ்சூல் மகளே.

[ஐங்குறுநூறு 386, ஓதலாந்தையார், பாலைத் திணை]

வேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்து
செலவு அயர்ந்தனையால் நீயே நன்று
நின் நயந்து உறைவி கடுஞ்சூல் சிறுவன்
முறுவல் காண்டலின் இனிதோ
இறு வரை நாட நீ இறந்து செய் பொருளே.

[ஐங்குறுநூறு 309, ஓதலாந்தையார், பாலைத் திணை ]


மேற்க்கண்ட இரு  ஐங்குறுநூற்று படல்களில் காணப்படும் கடுஞ்சூல் மகளே, கடுஞ்சூல் சிறுவன் என்ற அசைகள், கடுமையான சூலிலே (கர்ப்பத்திலே) பிறந்த மக்கள் என்று பொருள் தருகின்றன. அதாவது, சூலிலே முதல் சூல் கடுமையானது. ஆக, இம் மருத்துவப்  பண்பினை நன்கு உணர்ந்த ஓதலாந்தையார்  தலை மகளை "கடுஞ்சுல் மகளே" எனவும் தலை மகனை "கடுஞ்சுல் சிறுவன்" எனவும் தன்னுடைய பாலைத் 
திணை பாடல்களில் குறிப்பிடுகிறார்.

இன்று, சூலியல் (Obstetrics) மருத்துவத்தில், கடுஞ்சுலின் (Primiparvous) பண்புகள் பலவினை நாம் அறிவோம். அதில் ஒன்று கருவறை வாயிலின் (Cervix Uteri)  இளகுத் தன்மை [மேற்கோள்: ]. கடுஞ்சூலில், இந்த இளகுத் தன்மை குறைவாக இருப்பதினால், குழந்தை ஈனும் தருணத்தில் தாய்க்கு குடுதலான சிரமங்கள் ஏற்படுகின்றன. இதுபோக, கருவறை வாயில் உரிய காலத்துக்குளேயே  (37 வாரங்களுக்குள்) இளகினால், குறைச்சூல் (Preterm Pregnency) பிறப்பிற்க்கு வழிவகுக்கும். உலகெங்கும் பல்லாயிரகக் கணக்கான குழந்தைகள் குறைச்சூலில் பாதிக்கபடுகின்றன. அதனால், கருவறை வாயிலின் இளகுத் தன்மையை முன்கூட்டியே அறிந்துக்கொள்ள
இராமன் விளைவு (Raman Effect) போன்ற அடிப்படை அறிவியல் நுட்பங்களோடு, பல புதிய ஆய்வுகளும் தொடங்கியுள்ளன [மேற்கோள்: ].
இம்முயற்சிகள் மூலம் குறைச்சூல் பாதிப்பினை தவிர்க்க இயலும்.   


சரி, மற்றொரு அகநானூறு பாடலை பார்ப்போம். இது, நல்லாவூர் கிழாரின் மருதத் திணை பாடல்.

                                                                    " ... ... ...

புதல்வற் பயந்த திதலை! அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடிக்,
‘கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக   
... ... ... ".

[அகநானூறு 86 , நல்லாவூர் கிழார், மருதம் திணை ]


இப்பாடலில், "புதல்வற் பயந்த திதலை" என்பது வயிற்றின் மேற்ப் பகுதியில் சூல் காலத்தில் ஏற்ப்படும் ஒரு வகைத் தழும்பு (Striae Gravidarum) [மேற்கோள்: ]. இதனை சூல் திதலை  எனக் கூறலாம்.

இப்பாடலில், திருமணப் பெண்ணிடம், ஒளிர்மிகு நகை அணிந்த நால்வர் கூடித் தம்போல் கற்பினில் வாழ வழி கூறுவதுப் போல் புலவர் இயற்றியுள்ளார். அந் நாவரும் கற்பினில் வாழ்ந்து புதல்வர்களை ஈன்றவர்கள் என்ற தகுதிக்கு சூல் திதலையைச்  சான்றாக சிறப்பூட்டுகிறார். அப்படியொரு வழக்கமும் அக்காலத்தில் இருந்திருக்கலாம். ஆக, செல்வச்சிறப்பாக 'வால் இழை', கற்ப்பொழுக்கத்தில் வாழ்ந்து புதல்வர் ஈன்றமைக்கு மருத்துவச் சான்றாக 'சூல் திதலை' என அத்துனை சிறப்புகளையும் ஈரடியில் கூறுகிறார் நல்லாவூர் கிழார்.

பைந்தமிழ் இலக்கியங்கள் அனைத்துத் துறையினர்க்கும்  பற்பலக் கோணங்களை வாரி வழங்கும் தன்மையுடையுது. குறிப்பாக, அவற்றுள் செறிந்துள்ள அறிவியல் மருத்துவக் கோணங்கள் பண்டைய தமிழினம் ஒரு அறிவார்ந்தக் கூட்டம் என்று தெள் ஒலி தெரிக்க பறைசாற்றுகின்றன என்றால் அது மிகையாகது.


[கூடுதல் சூலியல் இலக்கியத் தொடர்புகள்: புளிங்காய் வேட்கைத்து - மசக்கை]



மேற்கோள்
. Beyond cervical length: emerging technologies for assessing the pregnant cervix. Feltovich H et. al. Am J Obstet Gynecol. 2012 Nov;207(5):345-54

Common Skin Conditions During Pregnancy. Tunzi M et. al. Am Fam Physician. 2007 Jan 15;75(2):211-8.

Friday, February 28, 2014

008. இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே


யாயே, கண்ணினும் கடுங் காதலளே
எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப,
எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,
இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே;
ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ்சினை
விழுக்கோட் பலவின் பழுப்பயம் கொண்மார்,
குறவர் ஊன்றிய குரம்பை புதைய,
வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம்
புலி செத்து, வெரீஇய புகர் முக வேழம்,
மழை படு சிலம்பில் கழை படப் பெயரும்
நல் வரை நாட! நீ வரின்,
மெல்லியல் ஓரும் தான் வாழலளே.

[அகநானூறு 12, கபிலர், குறிஞ்சி திணை]

மேற்கண்ட அகநானூற்று பாடலில் 2000 ஆண்டுகளுக்கு முன் இரு தலைப் பறவையை பிரியா துவரா நட்பிற்கு உவமையாக கபிலர் குறிப்பிடுகிறார் .
ஒத்த இரட்டையர்கள்  (Indentical Twins) ஒரே கருவில் தோன்றி தொடக்கத்திலேயே முழுமையாக பிரிந்து வளர்ந்து பிறப்பர். ஆனால், ஒட்டிய இரட்டையர்கள் (Conjoined Twins) ஒரே கருவில் தோன்றி இடையில் முழுமையாக பிரியாமல் ஒட்டியே பிறப்பர்.
இயல்பாக, ஒரு கருவணுவில் (Zygote) இருந்து கருக்குமிழ் (Blastocyst)  உருவாகி அதன் மேற்பகுதியான  கருவுறை (Chorion) தோன்றி, கருவறை (Uterus) மேல் பகுதில் இணைந்து வளரும். ஒத்த இரட்டைப் பிறப்பானது, ஒரு கருவானாலும் தொடக்கத்திலே  முழுமையாக பிளவுற்று தனி தனி கருவுறையில் கருவறையின் வெவ்வேறு பகுதியில் இணைந்து சூல் முதிர வளரும்.
       
மாறாக, ஒட்டுப் பிறப்பானது ஒரு கருவானாலும் சரிவர பிளவுறாமலோ (பிளவுக் கோட்பாடு), அல்லது பிளவுற்று பின் ஒட்டியோ (ஒட்டுக் கோட்பாடு), ஒரே கருவுறையில் வளரும். தலையொட்டு (Craniopagus), மார்பொட்டு (Thoracopagus), மேல்வயிரோட்டு (Xiphopagus ),அடிவயிரொட்டு (Omphalopagus), இடுப்பொட்டு (Ischiopagus), பின்இடுப்பொட்டு (Pyopagus) என  ஒட்டிப் பிறக்கும் பிறப்புக்களை ஒட்டி இருக்கும் உறுப்பினை கொண்டு பாகுபடுத்தலாம் [மேற்கோள்: ].

மேற்கண்ட அகநானூற்று பாடலில் குறிப்பிட்ட ஒட்டுப்பிறப்பானது இரு தலை ஓர் உயிர் (கவையோட்டு/பக்கஒட்டு) (Dicephalic parapagus) வகையை சேர்ந்தது [மேற்கோள்: ]. இருப்பினும், இவ்வகை ஒட்டுப்பிறப்பின் காரணிகள் இதுவென சரிவர இன்னும் விளங்கவில்லை.    இதைத் தாண்டி, விலங்கினம் இடையேயும்  இவ்வகை ஒட்டுப்பிறப்புகளும் காணப்படுகிறது.

கபிலரின் உவமையை உற்று நோக்குகையில், பிரிக்க இயலாதன்மை பொருந்திய பிறப்பாகவும், ஆக, அது தனிமை இல்லா நிலைமையை  பெற்றுள்ளது. அது போக, ஒட்டியே இருப்பினும் துவரா சிறப்பும் பெற்று அறிவியல், உளவியல் கூறுகளை ஏந்தியுள்ளது.   

தமிழ் இலக்கியங்கள் வெறும் காதலும் வீரமும் ததும்பும் காவியங்கள் மட்டும் அல்ல, அவை பல அறிவியல் கூறுகள் செறிந்த படைப்புகள் என்பதை உணர உணர்த்த வேண்டும்.




மேற்கோள்
. Echocardiographic assessment of conjoined twins Andrews RE , et. al . Heart. 2006 March; 92(3): 382–387.



Tuesday, January 14, 2014

எதுசரி அதுசரி - பகுதி 1: தண்ணீர் வெந்நீர்

 
 
பேச்சு வழக்கில் நழுவும் போக்கை தழுவும் முயற்சி இந்த "எதுசரி அதுசரி" பகுதி. தொடக்க நிலையிலேயே நழுவாமல் தழுவிக்கொண்டால் இலக்கணத்தில் பெருகும் வழுவமைதியின் தொகையை குறைத்துக் கொள்ளலாம்.  
 
முதலில்,  தண்ணீர் சிக்கலுக்கு வருவோம். உரையாடலில், "சுடுத்  தண்ணீர்",  "குளிர்ந்த தண்ணிர்" என்ற சொற்றொடர்களின் பயன்பாட்டினை நாம் பேச்சு வழக்கில் பலமுறை கேட்டிருப்போம். அதுசரிய?
 
"தண்" என்றலே குளிர்ச்சி என்று பொருள். ஆக, சுடுத் தண்ணீர் என்று கூறினால்,அது சூடான குளிர்ந்த நீர் என்று எதிர்மறையாக பொருள்படும். 
எதுசரி? நீரின் வெப்ப நிலைகளை குறிப்பிடுகையில், சூடாக வெந்நீர் என்றும், குளிர்ச்சியாக தண்ணீர் என்றும், பதமாக பதநீர் என்றும் பயன் படுத்தலாமே!

           
 

Monday, January 6, 2014

007. புளிங்காய் வேட்கைத்து - மசக்கை


"நீர் உறை கோழி நீலச் சேவல்
கூர் உகிர்ப் பேடை வயாஅம் ஊர
புளிங்காய் வேட்கைத்து அன்று நின்
மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே".

[ஐங்குறுநூறு 51, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது]


மசக்கை வேட்கை (pica) என்பது சூல் (கர்ப்பம்) தரித்த சில மகளிர்கள், இயல்பற்ற உணவோ பொருட்களோ உண்ணுவது. மேற்கண்ட ஐங்குறுநூறு மருதத் திணை பாடலில், நோய்யுற்று (அல்ல சூல் தரித்து) புளிங்காய் வேட்கை கொள்ளும் நிகழ்வை வெகு சிறப்பாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஓரம்போகியார் எடுத்துரைத்துள்ளார். 

மசக்கை வேட்கையின் வாழ்வியல் நிகழ்வுகளின் தமிழ் இலக்கியப் பதிப்புகள் நம் வரலாற்றில் முந்தி இருந்தாலும், இதன் காரணிகள் இன்றும் சரிவர புரிந்துக்கொள்ளப்படவில்லை. 

இயல்பற்ற உணவோ பொருட்களோ உண்ண ஏற்படும் வேட்கையின் (craving) காரணிகள் எல்லா வகை மக்கள்களுக்கும் போதுவானவை என்றால்லும், உட்க்கொள்ளும் உணவோ பொருட்களோ ஏனையப்  பண்பாட்டை தழுவியே காணபடுகிறது. இவ்வாறு, புளியங்காய், மாங்காய் உண்ணுவது தமிழ் பண்பாட்டைச்  சார்ந்தது. தமிழ் இலக்கிய வரலாற்றில் இவ்வகை நிகழ்வுகளை விவரித்திருந்தாலும், இதற்கென்று புளி உண்ணல் -puliphagia, மாங்காய் உண்ணல் -mangophagia என தனிப் பெயரிட்டு தற்கால உளவியலில், மருத்துவத்தில் இன்றுவரை விளக்கப்படவில்லை.

இருப்பினும், மசக்கை வேட்கையின் காரணிகளைபற்றிய ஒரு சில கணிப்புகள் தற்கால மருத்துவத்தில் கூறப்படுகிறது. அவற்றில் ஒன்று நுண் ஊட்டச்சத்து (தாதுச் சத்து / micronutrients) பற்றார்குறை (மேற்கோள்: க). கர்பிணி பெண்களைத்தாண்டி, இதுபோன்ற வேட்கை குழந்தை பருவத்தில்லும் (மண் உண்ணல் / Geophagy), ஒரு சில மன அழுத்தம் பெற்ற பெண்கள் இடையேயும் காணபடுகிறது. 

பள்ளி, கல்லூரிப் பாடத்திட்டத்தில் தமிழ் இலக்கிய பாடங்கள் பெரும்பாலும் வாழ்க்கை நெறிகள், கலை, காதல், வீரம், பண்பாடு போன்ற வாழ்வியல் அங்கங்களை கொண்டுள்ளது. இதைத் தாண்டி அறிவியல் அங்கங்களையும் பொதுத் தமிழ் பாடத்திட்டத்தில் செர்த்துக்கொள்வது சாலச் சிறந்தது.


மேற்கோள்
. Toward a comprehensive approach to the collection and analysis of pica substances, with emphasis on geophagic materials. Young SL, et. al. PLoS One. 2008 Sep 5;3(9):e3147



Friday, September 13, 2013

006. மனநலம் மன்னுயிர்க் காக்கம்




தூய மனநலத்தின் சிறப்புகளை வள்ளுவ பெருந்தகை (Thiruvalluvar) 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தம்முடைய சிந்தனைகளாக நமக்கு அளித்துள்ளார். மேலே, குறிப்பிட்ட இரு குரள்களும் அதற்க்கு சான்றாக எடுத்துக் கொள்ளலாம். மனநலம் பொறுத்து ஏனைய வளங்கள் அமையும் எனவும், அச்சிறந்த மனநலத்தை நல்லதோர் சமூகம் பேணும் எனவும், அடிப்படை உளவியல் சிந்தனைகளை இவ்வாறு விவரித்துள்ளாரா என்று நாம் சிந்திக்கவேண்டும். சரி, இதற்கும் மேலே ஆழமான உளவியல் சிந்தனைகள் திருக்குறளில் உள்ளனவா என்று சற்று தேடலாம்.

பிறப்பு, இறப்பு, உணவு, நோய், மருந்து ஆகிய பல வாழ்வியல் அங்கங்களை ஆராய்ந்து, தமது சிந்தனைகளை தொகுத்தளித்த திருவள்ளுவர், உளவியல் நிகழ்வுகளையும் தெள்ள தெளிவாக தம் பாடல்களில் பதித்துள்ளார் என்றால் அது மிகையாகத்து. இந்நிகழ்வுகள்ளுக்கு அவர் இன்னதென்று தனி பெயர் சூட்டவில்லையே தவிர, சில உளவியல் நிகழ்வுகளை இடுக்கணழியாமை என்ற அதிகாரம் வழியாக நமக்கு தொகுத்துள்ளார் என்றே கூறலாம்.  இதுபோன்ற பல அரிய பைந்தமிழ் அறிவியல் மற்றும் மருத்துவ சிந்தனைகளை முறிவின்றி தொடர்ந்து மேம்படுத்தும் செயற்கரிய செயலை செய்யாமலே போனோம்.


"இடுக்கண் வருங்கால் நகுக அதனை

'இடுக்கண் வருங்கால் நகுக' என்று துன்பத்தை எதிர்கொள்ளும் ஒரு அணுகுமுறையை வெகு நேர்த்தியாக கூறியுள்ளார். இக்கால உளவியலில் [Psychology] விளக்கப்படும் பாதுகாப்புப் பொறிமுறைகளில் ஒன்றான நகைப்பாக (அதாவது, துன்பம் நேர்கையில் நகுதல்) [Humor, Level 4 Mature Defense Mechanisms] இருக்குமோ என்று செந்தமிழ் கூறும் நல்லுலகமும், உளவியல் ஆய்வாளர்களும் சேர்ந்துதான் கூறவேண்டும். உளவியல் நிகழ்வுகளை உற்று கவனித்து, நினைந்து, ஆராயாமல் இவ்வளவு தெளிவாக ஒருவரால் கூற இயலாது. ஆக, அச்சிறப்புகள் யாவும் வள்ளுவ பெருந்தகைக்கேச் சாரும்.



இன்னாமையை இன்பம் என எற்றுக் கொள்பவர்களை, அவர்களுடைய பகைவரும் சிறப்புடன் போற்றுவர் என்று நல்லறிஞ்சர்கள் விளக்கியுள்ளனர். இன்னாமையை இன்பம் என எப்படி எற்றுக் கொள்ள மூடியும்? அப்படி அக்காலத்தில் எற்றுக் கொண்டார்களா? இக்குறள் வழி சிந்தனையும், தற்கால உளவியலில் விளக்கப்படும் பாதுகாப்புப் பொறிமுறைகளில் ஒன்றான உயர்மடைமாற்றத்துக்கு (அதாவது, தான் உற்ற இடையூறை நேர்மறையாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மாற்றிக்கொள்தல்) [Sublimation, Mature Defense Mechanisms] இணையான சிந்தனை என தோன்றுகிறது. இக்குறளில் உள்ள 'ஒன்னார் விழையுஞ் சிறப்பு' என்ற சீர்களின் பொருள், [அதாவது, பகையும் (உள்ளிட்ட அனைத்து சமூகமும்) சிறப்பிக்கும் வகை] உயர்மடைமாற்றத்துக்கு இணையாக நிலை நிறுத்துகிறது. இவ்வாறு, நேர்மறையாக மாற்றிக்கொள்வதால், இன்னாமையை இன்பம் என ஏற்றுக்கொள்ள இயலும். எடுத்துக் காட்டாக, தாகத்திற்கு தவறி தம்பியை இழந்த  தமையன் ஊரெங்கும் தண்ணீர் பந்தல் நிறுவும் செயல்.      



துன்பத்திற்கு ஆட்கொள்ளாதவர்கள் துன்பத்திர்க்கே துன்பம் விழைவிர்பார்கள் என கூறுகிறார். அனால், இக்குறளில் தோன்றும் 'இடும்பைக்கு  இடும்பை படாஅ தவர் ' என்ற சீர்கள் ஆய்வுக்குறியது என்பது தனிப்பட்ட கருத்து. இது தற்கால உளவியலில் விளக்கப்படும் பாதுகாப்புப் பொறிமுறைகளில் ஒன்றான ஒட்டா நிலைக்கு (அதாவது, உற்ற இடையூறும் அதை சார்ந்த உணர்வும் ஒட்டாதிருத்தல்) [Isolation of Affect, Anxiety Defense Mechanisms] இணையான சிந்தனையா என்று உளவியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து கூறினால் சிறப்பு. 


மேலும், மனநிலை கெட உடல் நோகும் என்ற கருத்தும் தமிழர்களுக்கு புதிதல்ல. பைந்தமிழ் இலக்கியங்களில் தொடர்ந்து விவரிக்கபட்டும் ஒரு வகையான மனம் பொருந்திய உடல் மாற்றம், பசலை (பசப்பு). இதுபோக, பசப்புறுபருவரல் என்றொரு தனி அதிகாரத்தையே வள்ளுவ பெருந்தகை நமக்காக படைத்துள்ளார்.




எப்படி காதலனை பிரிவதினால் வரும் மனமாற்றத்தின் விளைவு மேனியில் பசலையோ, அது போல துன்பம் விழைவிக்கும் மனமாற்றத்தின் இலக்கமும் உடலா என நாம் எண்ணலாமா? அப்படி என்றால் மனநிலை மாற்றம் எவ்வாறு உடலுக்கு கேடு விளைவிக்கும் என்ற சிந்தனையின் அடிப்படையில் அண்மையில் உருவெடுத்தது தான் உளஉடல் மருத்துவம் [Psychosomatic Medicine]. இப் புதிய மருத்துவ பிரிவின் கீழ், சமூக மற்றும் உளவியல் காரணிகள் எவ்வித தாக்கங்களை உடல் நலத்தில் உருவாகுகின்றன என்பதை ஆராயவும், ஆயிந்து அதன் வழியே அதற்க்குரிய மருத்துவ முறைகளை கண்டறிவதுதான்.

உளவியல் நிகழ்வுகள், முளையில் ஏற்ப்படும் வேதியல் மாற்றங்களை தழுவியே நிகழும் என்பது இன்றைய பொது கருத்து. நரம்பணுவியல் [Neuroscience] தற்பொழுது படிப்படியாக முன்னேற்றம் அடைந்திருந்தாலும், மனித மூளையின் இயக்கங்கள் குறித்து முழுமையாக இன்னமும் நாம் அறியவேண்டியது பல உள்ளன. இவ்வாண்டு (2013), மனித மூளையின் இயக்கங்களை புத்தம் புதிய நரம்பணுவியல் தொழில்நுட்பங்களை கொண்டு  துள்ளியமாகா அறிந்துக்கொள்ள தொடங்கப்பட்ட ஒரு கூட்டு முயற்ச்சியானது மூளை இயக்கங்கள் திட்டம் [BRAIN initiative aka. Brain Activity Map Project] (மேற்கோள்: க). குறிப்பிடும் வகையில், இது வரை இல்லாத பெரிய அளவிற்கு இம் முயற்ச்சிகள் உந்தப்பட்டுள்ளது.

இன்றைய நரம்பணுவியல், எவ்வாறு தனிப்பட்ட நரம்பணுக்கள் மூளையில் செய்திகளை உள்வாங்கி மருமொழிகின்றன என்ற அளவே கூறுகின்றது. ஆனால், இத் திட்டத்தின் மூலம், முதல் முறையாக மூளையில் உள்ள தனிப்பட்ட நரம்பணுகளின் இயக்கங்கள் விளைவாக ஏற்படும் கருத்து உருவாக்கம் (thought process) நுணுக்கங்களையும் நேரடியாக கண்டு புரிந்துக்கொள்ள இயலும் என எதிர்ப்பார்க்க படுகிறது. கருத்து உருவாக்கம் நுணுக்கங்கள் அறிந்தால், அது மனித வாழ்விர்க்கே அச்சாணியாக விளங்கும் மனம் என்னும் உட்ப்பொருளை காணும் அரிய வழி.  ஆக, உளவியலிலும், நரம்பியலிலும் நிரவியுள்ள பற்பல புதிர்களுக்கு இத் திட்டம் பொருள் விளக்கும் என நம்பப்படுகிறது.  



மேற்கோள்
. Research priorities. The NIH BRAIN Initiative.  Insel TR, Landis SC, Collins FS.  Science. 2013 May 10;340(6133): 687-8





Sunday, August 4, 2013

005. மரபணுத்தொகை - நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே

   
"ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே; 
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே; 
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே; 
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே; 
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே; 
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே; 
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே"


தொல்காப்பியம் தமிழில் தலையான முதல் நூல். இப்பெரு நூல், தமிழ் மொழியின் ஆளுமையும், தமிழர்களின் பண்பாட்டு சிறப்பினையும் தெளிவாக விவரித்துள்ளதை பெரும்பாலும் நாம் அறிவோம். இதுபோக, தொல்காப்பியம் உயிரின வாழ்வியலையும் (physiology) அதன் அடிபடையில் அமைந்த உயிரின வகைபாட்டியலின் (taxonomy) தொடக்கத்தை மிகச் சிறப்பாக விவரித்துள்ளது. 

தோலும் தொட்டு அறிவும் (touch sense),  நாக்கும் சுவையறிவும் (gustation), மூக்கும் நுகரறிவும் (olfaction), கண்ணும் பார்வையம் (vision), செவியும் கேள்வியும் (audition) அடங்கிய ஐம்புல அறிவோடு, ஆறாம் அறிவான மனதையும் (mind) உயிரின வாழ்வியலின் அடிப்படை என்று உயிரினங்களை நேரடியாக ஆயிந்து நெறிப்படுத்தியுள்ளதை, 2000 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கண்ட தொல்காப்பிய பாடல் 27 பதித்துள்ளது. இப்பாடலை தொடர்ந்து வரும் பாடல்களில் எவ்வகை உயிரினங்கள் எப்படி வகைபடுத்தலாம் என்ற தொடக்கநிலை சிந்தனைகளை தொல்காப்பியம் பதித்துள்ளது. இச் சிந்தனைகளை, மெய்பிக்கவும், மேம்படுத்தவும் தொடர்ந்து செய்துவந்திருந்தால், இன்று தமிழ் அறிவியலும், மருத்துவமும் இவ்வுலகில் தலைச்சிறந்து வளர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. பண்டைய தமிழ் இலக்கிய பதிப்புகள் இத்தகைய சிந்தனைகளை பெற்றிருந்தாலும், இடைகால இலக்கியங்களில் எவ்வித அறிவியல் சிந்தனைகளை பதித்துள்ளது என்ற ஆர்வமும் இன்று நமக்கு பெருகியுள்ளது. 

ஒவ்வொரு உயிரினத்தின் உருவ அமைப்பும் பண்புகளும் அதன் மரபணுத்தொகையை தழுவியே அமைகின்றன. மேலும், உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி மரபணுத்தொகையில் ஏற்ப்படும் மாற்றங்களை பொறுத்தே அமைகின்றன. இக்கட்டுரையில் மரபியல் அறிவியல் ஆய்வில் இன்றைய பெரிய கண்டிபிடிப்புகள் யாவை என காண்போம். நாம் நாமாக இயங்க, மெய்யிரக் கணக்கான உயிரணுக்கள் (cells) ஒருங்கினைந்து இயங்க வேண்டும். இவ்வுயிரணுக்களை இயக்குவது, நம் மரபணுத்தொகையே (genome). இம் மரபணுத்தொகை, எத்தகைய தன்மைகளை கொண்டுள்ளது, என்ற ஆர்வமும் ஆய்வுகளும் வெகு காலமாக தொடர்ந்து பெருகியுள்ளது.

முதல் படியாக, 1950களில்,  மரபிழை மூலக்கூறின் பரிமாணங்களை (DNA structure) அறிய ஆய்வுகள் தொடர்ந்தன. 1953இல், வெற்றிகரமாக வாட்சன் (Watson) மற்றும் கிரிக்கு (Crick) என்ற மரபியல் விஞ்ஞாணிகள்  மரபிழை மூலக்கூற்றின் பரிமாணங்களை தம் ஆய்வின் முடிவுகளை கொண்டு விவரித்தனர்.

இரண்டாம் படியாக, 1990களில், பன்னாட்டு கூட்டு முயற்ச்சியாக மனித மரபணுத்தொகையில் உள்ள மரபணுக்களின் எண்ணிக்கையும் அவை அடைங்கிய மொத்த சொற்றொடர்களையும் (DNA Sequence) மரபியல் விஞ்ஞாணிகள் ஆயிந்து ஆராயிந்தனர் (Human Genome Project).

மனித மரபணுத்தொகையானது, ஏறத்தாழ 3 தொள்ளுண் [௲௲௲] (3x109 அல்ல 3 billion) அடிப்படை மூலக்கூறுகளை (nucleotides) கொண்ட நெடுந்தொடராக கூறப்படுகிறது. இதில், மொத்தம் 20,000–25,000 மரபணுக்கள் (genes) உள்ளதாக முடிவுகளை அறிவித்துள்ளனர். ஆனால், என்ன ஒரு வியப்பு என்றால் இத்தனை மரபணுக்களும் வெரும் இரண்டு விழுக்காடு (2%) தான். மீதியுள்ள 98% மரபணுத்தொகை பயனெற்ற மரபிழையாக (Junk DNA) தான் வெகு காலமாக ஒதுக்கி வைத்தனர்.

ஆனால், மூன்றாம் படியாக, அண்மையில் மேற்கொண்ட பெரிதோர் பன்னாட்டு கூட்டு முயற்ச்சியில், மனித மரபணுத்தொகையில், 80%, செயல்பாட்டில் தனிச்சிறப்புகளை கொண்டது என்று ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர் [ENCODE Project - மரபிழை அங்கங்களின் தகவற்களஞ்சியம்] (மேற்கோள்: க). இம்மரபிழை தொடர்கள், மேற்க்கண்ட மொத்த மரபணுக்களின் வெவேறு கட்டுபாட்டு தளங்களாக விவரிக்க பட்டுள்ளன.  சரி, இப்புதிய கண்டுபிடிப்பின் தாக்கம் என்ன? மரபணுகளின் நேரடி பாதிப்பால் விளையும் சீர்கேடுகள் போக, மரபணுகளின் கட்டுபாட்டு தளங்களில், அதாவது ஒரு படிமேல், ஏற்படும் பாதிப்பும் உடல் சீர்கேடுகளை விளைவிக்கும் என்பதுதான். இவ்வுயர்நிலை மரபியல் கண்டுபிடிப்பு, மருத்துவ அறிவை கற்பனைக்கு எட்டா அளவிற்கு விரிவடைய செய்துள்ளது. 
 

மேற்கோள்
. An integrated encyclopedia of DNA elements in the human genome. ENCODE Project Consortium, Bernstein BE, Birney E, Dunham I, Green ED, Gunter C, Snyder M.  Nature. 2012 Sep 6;489(7414):57-74.